பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று !

 📌 பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று !



30_10_2024 - Wednesday 


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, இன்றைய தினமும் எதிர்வரும் நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளிலும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றைய தினமும் எதிர்வரும் 4ஆம் திகதியும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், சகல காவல்துறை அதிகாரிகளும் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும்

அத்துடன், முதலாம் திகதியும் 4 ஆம் திகதியும், முப்படையினரும் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் கடமைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களுக்கு மாத்திரமே அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதேநேரம், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூலம் வாக்களிப்புக்காக 759, 210 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதில் 20, 551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களின் படி, 738, 659 பேர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post